Tamilnadu

”அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் ஒருவருடம் சிறை".. நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!

விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் அனுமதியின்றி வைப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35 இன்படி திருத்தப்பட்ட 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படியும், அதன்கீழ் உருவாக்கப்பட்ட 2023ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படியும் விளம்பரம் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 13.04.2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேபோல் உரிமக்காலம் முடிந்தபின்னும் அகற்றப்படாமல் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.

மேலும் பேனர்கள், பதாகைகள், விளம்பரப் பலகையை அகற்றத் தவறுபவர்களிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள், விளம்பரப் பலகை வைக்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வருடச் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்படும்.

அதேபோல் பேனர்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டார் உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”நானும் 10ம் வகுப்பு fail.. ஆனா இப்போது கலெக்டர்”: மாணவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய திருப்பூர் ஆட்சியர்!