Tamilnadu
ஒடிசா கோர விபத்திற்கு யார் பொறுப்பு?.. ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும்: கே.எஸ்.அழகிரி!
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் ரயிலின் சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது. அதேபோல் அடுத்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்டு இருந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது.
நேற்றிலிருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளும் மற்றும் ஒன்றிய அரசுகளும் ஒத்துழைப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் 1000க்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் தவறான சிக்னல் கொடுத்தால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளைத் தவிர்க்க ‘Kavach’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) அமைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2022 ஒன்றிய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கியமான இந்த தடத்தில் அவ்வாறு எந்த பாதுகாப்பு அமைப்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. ஓட்டுநர் தவறு செய்தலும் விபத்தைத் தவிர்க்கும் தானியங்கி செயல்பாடான இந்த அமைப்பு செயல்பட்டிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாட்டையே உலுக்கியுள்ள இந்த கோர விபத்திற்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்துக் கூறிய கே.எஸ்.அழகிரி, "புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கிற பா.ஜ.க. அரசு, ரயில் விபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ரூ. 40,000 கோடி நிதியை ஏன் ஒதுக்கவில்லை? ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்திற்கு யார் பொறுப்பு?
1956 ஆம் ஆண்டு அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்ட போது அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அதைப்போல, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்திற்கு உரிய பொறுப்பு ஏற்று இன்றைய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!