Tamilnadu

”மோசமான ஆட்சிக்கு உதாரணம் அ.தி.மு.கவின் 10 ஆண்டுகால ஆட்சிதான்”: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கு

அ.தி.மு.க ஆட்சியின்போது பல்வேறு துறையில் நடந்துள்ள முறைகேடுகள் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "2016 முதல் 2021 வரை அ.தி.மு.க ஆட்சியில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஒரு கட்சி அறிக்கையோ அல்லது செய்தி நாளேடுகளோ சொல்லவில்லை. சி.ஏ.ஜி அறிக்கை சொல்லி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான சலுகைகளை தி.மு.க அரசு வழங்கி வருகிறது. ஆனால் கடந்த காலத்தில் அ.தி.மு.க ஆட்சிய்ன போது எந்த அளவுக்கு வீணாக செலவு செய்துள்ளனர் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை சொல்லி உள்ளது.

2016 முதல் 2021 வரை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 5 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என்ற நிலையில் 2.8 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டியுள்ளனர். மேலும் முறையான தகவல்களை ஒன்றிய அரசுக்கு அளிக்காத காரணத்தால் ரூ. 500 கோடி வரையிலான நிதி ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5 கோடி ரூபாய் வரை வீணாக செலவு செய்துள்ளனர் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதிதிராவிட சமூக மக்களுக்கான வீடுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் வேறு சமூக நபர்களுக்கு ஒதுக்கிய உள்ளனர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 60% வீடுகளை உரிய முறையில் வழங்காமல் மிகவும் அலட்சியமாக வழங்கி உள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 354 வீடுகளை முறைகேடாக வழங்கி உள்ளனர்.

அதேபோல மேப்பிங் செய்வதையும் மிகவும் அலட்சியமாகப் பொறுப்பற்ற வகையில் செய்துள்ளதால், லக்னோ உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது. இதுபோன்ற செயல்களால் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொகை முறைகேடாகச் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நிர்வாகம் எப்படி நடைபெறக் கூடாது என்பதற்காக உதாரணமாக 2016-2012 வரை நடந்த அ.தி.மு.க ஆட்சிதான் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரைக் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பாக முறையாக எந்த பணிகளையும் செய்யவில்லை. எனவே அதையெல்லாம் சரிசெய்யும் வகையில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் பள்ளியின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் போது 3% மாணவர்கள் அரசுப் பள்ளியிலிருந்து தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்றுள்ளனர். ஆனால் தி.மு.க ஆட்சி வந்த பிறகு 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Also Read: “கோழைத்தனமான முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது”: அண்ணாமலையின் பிளாக் மெயில் கும்பலுக்கு அமைச்சர் PTR பதிலடி!