Tamilnadu

பெயிண்ட் தின்னரை குடித்த சகோதரிகள்.. உயிரிழந்த 3 வயது சிறுமி: தொடர் சிகிச்சையில் 5 வயது அக்கா!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதில் தேஜஸ்ரீ, 5 வயதில் மெளலி ஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வாகனத்தைத் துடைத்து பெயிண்ட் அடிப்பதற்காக கோவிந்தராஜ் சகோதரர் பெயிண்ட் மற்றும் அதற்குப் பயன்படுத்தும் தின்னரை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார். இதை தேஜ ஸ்ரீ மற்றும் மெளலி ஸ்ரீ இருவரும் எடுத்துக் குடித்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுவர்களைக் கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பெற்றுவந்த 3 வயதுக் குழந்தை தேஜஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மெளலி ஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் வைத்திருந்த தின்னரை குடித்து 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் குழந்தைகள் கையில் கிடைக்கும் வகையில் ஆபத்தான பொருட்களை வைக்கக் கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நினைவூட்டுகிறது.

Also Read: தொடரும் மரணங்கள்.. கைக்கழுவும்போது நீருக்குள் தவறி விழுந்த சிறுவன் பலி: சுற்றுலா வந்த போது நேர்ந்த சோகம்!