Tamilnadu

பெற்றோர்களே உஷார்.. தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தைக்கு நடந்த துயரம்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாணியக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின். இவரது மனைவி மேரி வர்ஷா. இந்த தம்பதிக்கு ஷகிப் சேன்டினோ என்ற மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தந்தை சுஜின் கடலுக்கு சென்றுள்ளார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டிலிருந்துள்ளனர். இதையடுத்து மனைவி மேரி வர்ஷா வீட்டின் அருகே இருந்த கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, 3 வயது மகன் ஷகிப் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு கடைக்குச் சென்ற மேரி திரும்பி வந்த போது மகனைக் காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இவர்கள் தெருவிலேயே புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. அந்த வீட்டின் கதவு திறந்து இருந்ததால் மகன் அங்கே சென்று இருப்பானோ என்ற சந்தேகத்தில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது மூடப்படாத தண்ணீர் தொட்டியில் மகன் சடலமாக மிதந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கேஸ் காலி.. தோசை கிடையாது..” - மனைவியை கொடூரமாக கொன்ற 60 வயது முதியவர்.. சம்பவத்தின் முழு பின்னணி என்ன ?