Tamilnadu

20 கி.மீ தூரம் காரில் போலிஸாரை இழுத்துச் சென்ற இளைஞர்.. சினிமா பாணியில் மடக்கி பிடித்த பரபரப்பு காட்சி!

மகாராஷ்டிரா மாநிலம் தானே ராய்க்கர் மாவட்டத்தில் பீம்பீச் சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையில் போக்குவரத்து போலிஸார் நெரிசல் ஏற்படாதவறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவார்கள். அந்தவகையில், நேற்றைய தினம் அந்த சாலையில் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி காரை வேகமாக இயக்கியுள்ளார். இதனைக் கண்ட போக்குவரத்து போலிஸார் மோகன் மாலி (37) அந்த காரை மடக்கிப் பிடித்து நிறுத்தினார்.

போக்குவரத்து போலிஸார் அருகில் செல்லும் போது காரை வேகமாக இயக்க முயன்றுள்ளார். இதனைக் கண்ட போக்குவாரத்து போலிஸார் உடனே காரின் பானெட் மீது தாவி பிடித்தார். போலிஸார் பானெட்டை பிடித்திருந்ததையும் கண்டுக்கொள்ளாமல் அவரை இழுத்துக் கொண்டு அந்த கார் வேகமாகச் சென்றுள்ளது.

அந்த கார் பாம் பீச் சாலை முழுவதையும் கடந்த பெலாப்பூர் - உரான் சாலையை நோக்கிச் சென்றது. ஆனாலும் மாலிக் விடாமல் காரைப் பிடித்தவாறு சென்றார். இதற்கிடையில் போலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 20 கி.மீ தொலைவில் உள்ள கவன் பாட்டா அருகே காரை போலிஸார் மடக்கி பிடித்தனர். காரில் ஆதித்யா தோண்டிராம் பெப்பேடே (37) என்பவர் கஞ்சா போதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலிஸார், அவர் மீது கொலை முயற்சி, ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலிஸாருடன் கார் வேகமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read: தங்கம் வாங்க வந்த தெலுங்கானா தம்பதி.. நகை வியாபாரியிடம் அறிமுகம் செய்து நூதன கொள்ளை - விசாரணையில் பகீர் !