Tamilnadu

“அருவருப்பான வெறுப்பு அரசியலை சிலர் செய்கிறார்கள்” : இளைஞர்களுக்கு அமைச்சர் உதயநிதி சொன்ன அட்வைஸ்!

தமிழகத்தில் அருவருப்பான, வெறுப்பு அரசியலை சிலர் செய்து வருகிறார்கள், மாணவர்கள் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை எது நல்ல செய்தி என்பதை தெரிந்து தங்களுடைய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநில கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கின்னஸ் சாதனை திட்டமான கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கான முன் பதிவு துவக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சென்னை மாநில கல்லூரியில் உள்ள 3 மாணவர்களுக்கு முன்பதிவுக்கான சான்றிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 4 ஆண்டுகளாக கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி வெற்றிகரமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடத்தி வருகிறார்.

ஆகஸ்ட் 6 தேதி நடைப்பெறுக்கின்ற இம்மாரத்தான் போட்டியில் முதன்முறையாக திருநங்கைகள் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. இந்த மாரத்தான் போட்டியில் திருநங்கைகள் பதிவு செய்வதற்கு 100 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. எத்தனை பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்கிறார்களோ அத்தனை பேருக்கும் ஊக்கத்தொகையாக 1000 ரூபாயை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் வழங்கப்படும்.

சென்னை மாநில கல்லூரியில் விடுதி மற்றும் அரங்கம் விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் அருவருப்பான, வெறுப்பு அரசியலை சிலர் செய்து வருகிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் எது நல்ல செய்தி என்பதை தெரிந்து தங்களுடைய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு ,காந்தி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Also Read: ” திரையரங்கில் நடைபெற்ற தீண்டாமை செயல் கண்டிக்கத்தக்கது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!