Tamilnadu

திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் குடும்பம்!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த கம்மவார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரேம்குமார். இவர் டாஸ்மாக் மதுபானக் பாரில் இருக்கும் காலி பாட்டில்களைக் குத்தகைக்கு எடுத்து மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கம்மவார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரது இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு தனது நண்பர் விஜயகுமார் என்பவருடன் பிரேம்குமார் சென்றுள்ளார்.

இவர்கள் திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது செல்லும் போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மேம்பாலத்தில் நடுவிலிருந்த உயர் மின் விளக்கு கோபுரத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விஜயகுமார் படுகாயம் அடைந்துள்ளார். பிறகு அங்கிருந்த பொதுமக்கள் விஜயகுமாரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலிஸார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பிரேம்குமாருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணமானதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் கம்மவார் பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாலையில் அறுந்து விழுந்த பாஜக அமைச்சர் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர்.. ஒருவர் படுகாயம்: மக்கள் கண்டனம்