Tamilnadu

புதிய செல்போன் கேட்ட காதல் கணவன்.. மனைவி வாங்கி தர மறுத்ததால் நடந்த விபரீதம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு வைஷ்ணவன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், நிரந்தர வேலை எதுவும் இல்லாததால் முருகேசன் இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் நகை மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை விற்றுக் குடித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில் மனைவியிடம் முருகேசன் தனக்கு புதிய செல்போன் வாங்கி கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முருகேசன் மனைவி மற்றும் மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார்.

இதனால் பிரியதர்ஷினி மகன் வைஷ்ணவனை அழைத்துக் கொண்டு தனது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டுள்ளார். பிறகு அடுத்தநாள் மனைவியைத் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும் படி கூறியுள்ளார். இதற்கு அவர் நீங்களே வந்து அழைத்துச் செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகேசன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அருகே குடியிருப்பவர்கள் பிரியதர்ஷினிக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அவர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது முருகேசன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் முருகேசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் புதிய செல்போன் கேட்டு மனைவி வாங்கி கொடுக்காததால் முருகேசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Also Read: ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கடத்தல்.. சிக்கவைத்த CCTV காட்சி: முகமூடி கொள்ளையர்களை நெருங்கிய போலிஸ்!