Tamilnadu

நாட்டு வெடிகுண்டால் இரண்டு கைகளை இழந்த பிரபல ரவுடி.. நண்பரை சந்திக்க சென்ற இடத்தில் நடந்த விபரீதம் !

சென்னை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்த சென்னையின் பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்தி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விஜயகுமாரை சந்திப்பதற்காகவும் நாய் வாங்குவதற்காகவும் அம்பத்தூர் ஒரகடம் பகுதிக்கு வந்த ஓட்டேரி கார்த்தி விஜயகுமார் வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஓட்டேரி கார்த்திக்கின் இரு கைகள் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

நாட்டு வெடிகுண்டு வெடித்து கையில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக கையில் இருந்த எலும்புகள் நொறுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக்கின் இரு கைகளும் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வெடி விபத்து நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்திக் யாரையாவது கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் இருந்த விஜயகுமாரை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய காவலர்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல் !