Tamilnadu

அதிகாலையில் பற்றி எரிந்த 2 கார்.. பதறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்: நடந்தது என்ன?

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் தணிகை வேம்படி சக்தி விநாயகர் கோயில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களைச் சாலையோரம் நிறுத்துவது வழக்கம்.

இதன்படி நேற்று சாலையோரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், கிண்டி மற்றும் திருவான்மியூர் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் காரில் எரிந்திருந்த தீயை சிறிது நேரத்திலேயே அணைத்தனர். இதனால் பெரிய விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எரிந்த காரில் ஒன்று அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்றும் மற்றொரு கார் உள்ளகரத்தை சேர்ந்த காந்திமதி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இந்த ஓட்டுநர் கோபி என்பவர் ஓட்டிவந்து பழவந்தாங்கலில் நிறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காருக்கு மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஆளுநரால் தொடரும் உயிர்பலி? : “ஆன்லைன் சூதாட்டத்தில் என்ஜினீயர் தற்கொலை” - கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!