Tamilnadu

ஓட்டு வீட்டில் வாழ்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர்.. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கிய முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.11.2022) 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். 

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள அரியலூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த கார்த்திக் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தங்களின் மகன் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கு உதவிகள் வேண்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்கள்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்திட அறிவுறுத்தினார்.   

கார்த்திக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் இன்று, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை வழங்கினார்.     

முன்னதாக, இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் எஸ். கார்த்திக் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.11.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

Also Read: "மகாயோக்கியரை போல விமர்சனம் செய்ய இவர்களுக்கு யோக்கியதை இல்லை".. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!