Tamilnadu

8 சவரன் நகைக்காக நண்பனிடமே கைவரிசை காட்டிய சக நண்பர்கள்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

மதுரை கான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. சட்ட கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர் இஸ்மாயில் என்பவருடன் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களைத் தடுத்து நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. பிறகு பாலாஜி அணிந்திருந்த 8 சவரன் தங்கை செயினை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இது சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது இஸ்மாயிலுடன் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் இஸ்மாயிலிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இஸ்மாயில் தனது நண்பர்கள் சுந்தர வர்மா, ஆதிஸ்வரன், தினேஷ், மபுந்தள் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பாலாஜியிடம் இருந்து நகையைப் பறிக்க திட்டம் போட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின்படி பாலாஜியிடம் நகை பறித்து இஸ்மாயில் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் 5 பேரையும் கைது செய்து 8 சவரன் நகையை மீட்டு பாலாஜியிடம் ஒப்படைத்தனர். நண்பனிடமே சக நண்பர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விமானம் வெடித்து சிதறும்... சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்!