Tamilnadu

மனைவியின் தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மாமன்.. துப்பு துலங்கிய போலிஸ் - வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

சென்னை கிண்டி மடுவன்கரையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளியான செல்வகுமார் (37). இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், ஹரி, தேவஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்வி தமது கணவர் செல்வகுமாரை பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த செல்வகுமார் செங்குன்றத்தில் உள்ள தமது மனைவியின் தம்பி நாகராஜ் (26) வீட்டில் வசித்து வந்தார். நேற்றிரவு இருவரும் மது அருந்திய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தமது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு தம்மை பிரிந்து சென்றதற்கு மைத்துனர் நாகராஜ் தான் காரணம் எனவும், அக்காவை கண்டிக்காததால் தான் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டார் என இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் செல்வகுமார் தமது மனைவியின் தம்பி நாகராஜை கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்தார். நள்ளிரவில் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு சென்று தமது மைத்துனனை யாரோ வெட்டி கொலை செய்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலிஸார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நாகராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து செல்வகுமாரிடம் விசாரணை நடத்தியதில் யாரோ வெட்டிவிட்டு தப்பி சென்றதாக முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமடைந்த செங்குன்றம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தமது மனைவி வேறு ஒருவருடன் சென்றதை கண்டிக்காததால் மைத்துனரை அரிவாள் மனையால் வெட்டி கொன்றதை ஒப்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து மாமன் செல்வகுமார் அவரது நண்பன் ரமேஷ் ஆகிய இருவரை செங்குன்றம் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் ஆத்திரத்தில் மைத்துனரை கொன்று நாடகமாடிய மாமனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அம்புட்டும் பொய்..” -ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்: உண்மையால் அதிர்ச்சி