Tamilnadu

பிரபல நடிகர் வீட்டில் 200 சவரன் கொள்ளை.. மனைவியை கட்டிபோட்டு துணிகரம்: காட்டிக் கொடுத்த CCTV!

'எல்லாம் அவன் செயல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராதாகிருஷ்ணா. இவரை ஆர்.கே. என அழைப்பர். இவர் பாலா இயக்கிய 'அவன் இவன்', 'அழகர் மலை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ்காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்து வந்தார். அந்நேரம் திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர்.

இதனையடுத்து அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நடிகர் ராதாகிருஷ்ணா வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாள நாட்டை சேர்ந்த வாட்ச் மேன் ரமேஷ் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராதாகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலிஸார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் வெளிமாநிலத்திற்கு தப்பி செல்லாதவாறு விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு கொள்ளையர்களின் புகைப்படத்தை அனுப்பி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்-க்கு கிட்னியை கொடுக்க முன்வந்த மகள்.. தந்தைக்கு மகள் செய்த கடமை!