Tamilnadu

ரூ.15 ஆயிரம் பணத்திற்கு ஆசைப்பட்டு கோடிகளை இழந்த 1 லட்சம் பேர்.. வெடித்துக் கிளம்பிய எண்ணெய் கிணறு மோசடி!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் அலெக்சாண்டர். இவர்கள் இருவரும் சென்னையில் ஹிஜாவு குழுமம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாகக் கூறி, கடந்த 4 வருடத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர். மேலும் முதலீட்டாளர்களைப் பிடித்துக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் இந்த நிறுவனத்தில் முகவராகவும் இணைந்து வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்த நிறுவனம் துபாய், சிங்கப்பூர் ,மலேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய் கிணறுகள் வைத்திருப்பதாகவும் அதில் வசூல் செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்து லாபம் பெறுவதாகவும் கூறி பொதுமக்களை அவர்கள் கவர்ந்துள்ளனர். இதை நம்பி பலரும் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டிப் பணம் வராததால் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அணுகியுள்ளனர். அப்போது, வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் வருவதற்குக் காலதாமதம் ஆவதால் வட்டி பணம் கொடுப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என நிதி நிறுவனம் கூறியுள்ளது.

அதன் பின்பும் பணத்தைத் தராததால் முதலீட்டாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டபோதுதான் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சவுந்தரராஜன், மகன் அலெக்சாண்டர் ஆகியோர் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் நிதி நிறுவனத்தில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்தினம் சுமார் ஒரு லட்சம்பேர் ரூ.10 ஆயிரம் கோடி வரை இழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: மயக்க மருந்து கலந்த ஆப்பிள் கொடுத்து சிறுமிகள் வன்கொடுமை.. கர்நாடகாவை உலுக்கிய மடாதிபதியின் கொடூரங்கள்!