Tamilnadu

கொடநாடு வழக்கை கையில் எடுத்த CBCID: ஜெயலலிதா, சசிகலா தங்கிய அறைகளில் சோதனை - கலகத்தில் எடப்பாடி கும்பல் !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு அண்மையில் மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு சம்மந்தமாக கடந்த ஒருவருட காலமாக தனிப்படை போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சசிகலா, விவேக், கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை போஜன் உட்பட 316 பேரிடம் இவ்வழக்கு சம்மந்தமாக பலரிடம் விசாரனை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தனிப்படை போலிஸார் 316 பேரிடம் நடத்திய 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஆவண நகல்களை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த வந்த நீதிபதி முருகன் மற்றும் சி.பி.சி.ஐ.டி புலனாய்வு அதிகாரிகளிடம் தனிப்படை போலிஸார் ஒப்படைத்தனர்.

இதன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணையை மீண்டும் முதலில் இருந்து துவங்க சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷக்கில் அக்தர் திட்டமிடப்பட்டு இன்று சம்பவம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட் பங்களாவில் விசாரணை துவக்கினர். இதில் கொலையாளிகள் திட்டமிட்டு பங்களாவில் நுழைந்த நுழைவு வாயில் மற்றும் பங்களாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் பங்களாவின் பல்வேறு பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சார்பில் முதல் குற்ற பத்திரிக்கை பதிவு செய்து இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், உள்ளிட்ட பத்து குற்றவாளிகள் உட்பட கொடநாடு எஸ்டேட் மேலாளர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பங்களா கணக்காளர் மற்றும் காசாளர் உள்ளிட்ட இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

இன்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் எஸ்டேட் பங்களாவிற்கு சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் உள்ளே பணிபுரியும் பலரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக விசாரணை நடத்திய‌ சிபிசிஐடி போலிசார் பங்களாவில் ஆவணங்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட பகுதிகளை புகைப்படங்களால் பதிவு செய்து இரண்டு மணி ஆய்வு மேற்க்கொண்டு சென்றனர்.

குறிப்பாக நாளை மறுநாள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அதேபோல் இன்று கொடநாடு எஸ்டேட் பங்களாவில் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் நாளை விசாரணை நடைபெறும் என தெரிய வருகிறது.

Also Read: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களா ஊழியர்கள் 25 பேருக்கு சம்மன் - அதிரடி விசாரணையில் இறங்கிய போலிஸ்!