Tamilnadu

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை பெருநகர பகுதி.. 4 மாவட்டத்தில் இருந்து இணைக்கப்படும் இடங்கள் என்னென்ன ?

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA ) கடந்த 1972 -ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் நிறுவப்பட்டது. இது சென்னை நகரின் வளர்ச்சி பணிகளில் திட்டமிட்டு முறைப்படுத்துத அமைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் நகர் பகுதிகளில் களப்பணியாற்றி, அதன் அடிப்படையில் அறிக்கைகள் அளித்தல்.

சென்னை பெருநகர் பரப்பிற்கு வரைவு திட்டம் ஆயத்தம் செய்தல், புதிய நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல். புதிய பகுதிகள் குறித்த திட்டங்களை உருவாக்குதல் போன்ற பணிகளை செய்து மேற்பார்வையிட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்காக இறுதிமுடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பெருநகர பகுதியை (சிஎம்டிஏ) தற்போது உள்ள 1,189 சதுர கிமீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் வெளியிட்ட உத்தரவில், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,225 கிராமங்கள் சென்னை பெருநகர பகுதியில் இணைக்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி தாலுகாக்களைச் சேர்ந்த 550 கிராமங்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்காவில் இருந்து 44 கிராமங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களில் இருந்து 335 கிராமங்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுகுன்றம் மற்றும் வண்டலூர் தாலுகாக்களைச் சேர்ந்த 296 கிராமங்களும் சென்னை பெருநகர பகுதிகளில் இணைக்கப்படுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் உருவாக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "சிறுமியை வன்கொடுமை செய்தாலும் அவரை கொலை செய்யாத கருணை கொண்டவர்"- குற்றவாளிக்கு சலுகை காட்டிய நீதிமன்றம்!