Tamilnadu

மனைவியுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த புதுமாப்பிள்ளை.. திருமணமாகி 1 மாதத்திலேயே நேர்ந்த அவலம் !

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு. காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இதனால் தனது மனைவியை அடிக்கடி வெளியே கூட்டிச்சென்று வந்துள்ளார். மேலும் குடும்பத்துடன் அவ்வப்போது கோயில் சுற்றுலா இடங்கள் என சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணத்தினால் நேற்று பாபு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒரு வேனில் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அங்கே புலிக்குகை,வெண்ணை உருண்டைபாறை, ஐந்துரதம், அர்ஜுனன்தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த உடன் இறுதியாக மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு சென்றனர்.

அப்போது மனைவியுடன் கடலில் குளித்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக வந்த ராட்ச அலை பாபுவை இழுத்து சென்றுள்ளது. இதனைக்கண்ட அவரது மனைவி கத்தி கூச்சலிட்டு தனது கணவரை மீட்க போராடினார். பின்னர் அங்கே வந்த மீனவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன பாபுவை தேடினர். அப்போது பாறை கற்கள் குவியல் பகுதியில், அவரது இறந்த உடல் கரை ஒதுங்கியது

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த அதிகாரிகள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 1 மாதத்திலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கேள்வி கேட்டு பதில் சொல்லாத மாணவர்.. கோவத்தில் ஆசிரியர் செய்த செயலால் வெடித்துச் சிதறிய சிறுவனின் நரம்பு!