Tamilnadu

கொடநாடு வழக்கை கையில் எடுத்த CBCID: கலகத்தில் எடப்பாடி கும்பல் - அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான 950 எக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் பங்களா கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்து.

அவ்வாறு இந்த தேயிலை எஸ்டேட்க்குள் நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. அத்துடன் பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இதுதொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய், ஜெம்சீர் அலி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்று ஒரே மாதங்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேபோல் இரண்டாவது குற்றவாளியாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த சாயன் குடும்பத்துடன் கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் போது மர்ம வாகனம் மோதியதில் சாயன் மனைவி மற்றும் அவரது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தனர்.

அதே மாதத்தில் கோடநாடு கணினி பொறியாளர் தினேஷ்குமார் தற்கொலை என இவ்வழக்கில் கொலை கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது.கோடநாடு பொறியாளர் தினேஷ்குமார், காவலாளி ஓம் பகதூர், சயான் மனைவி வினு பிரியா ,அவரது 6 வயது குழந்தை நீது ,முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் என மர்ம மரணங்கள், கொலை சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந் நிலையில், அதிமுக ஆட்சியில் போலிஸார்ர் நேர்மையாக விசாரணை நடத்தவில்லை என இரண்டாவது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அப்போதைய மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா இவ்வழக்கை மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவுத் உத்தரவின்பேரில் நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 8 மாதத்திற்கு மேலாக சேலம், ஈரோடு, கோவை உட்பட கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் முன்னாள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் சாட்சிகளை களைத்ததாக கைது செய்யப்படும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் எலக்ட்ரானிக்ஸ் சாட்சிகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கிடைத்த ஆவணங்கள், 60க்கும் மேற்பட்ட செல்போன் ஆவணங்களைக் கொண்டு இதுவரை இவ்வழக்கு விசாரணை குறித்து 316 பேரிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், கடந்தவாரம் இவ்வழக்கை தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு குறித்த விசாரணை செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகள் குறித்த தகவல்கள், அனைத்தையும் எதிர்வரும் 13ஆம் தேதி மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலிஸார் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை அதிகாரிகள் யார் என்பதை அறிவித்து, சி.பி.சி.ஐ.டி தனி அதிகாரி கொடநாடு கொலை கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளனர்.

Also Read: ”கொடநாடு வழக்கு.. விரைவில் வெளியாகப்போகும் பழனிசாமியின் உண்மை முகம்”: ஆர்.எஸ்.பாரதி பதிலடி!