Tamilnadu

சாலையோரத்தில் கிடந்த ரூ.500 நோட்டு கட்டுகள்.. அள்ளிச்சென்ற பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

வேலூர் கொணவட்டம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த மர்ம கும்பல், பணக்கட்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பணத்தில் சில நோட்டுக்கட்டுகள் காற்றில் பறந்து சென்றுள்ளன. இதனைக்கண்ட பொதுமக்கள் அதனை எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் ஒரு சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சாலையோரத்தில் இருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பணத்தை எடுத்துச்சென்ற சில பொதுமக்களிடம் இருந்தும் பணத்தை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து அதனை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து எண்ணி பார்க்கையில் அதில் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அதனை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து வருகின்றனர்.

மேலும் அங்கிருந்து பறந்து சென்ற பண நோட்டுகளை எடுத்துச்சென்ற பொதுமக்கள் அந்த 500 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த வேண்டாம் என்றும், அது கள்ள நோட்டு எனவும் காவல்துறை எச்சரித்துள்ளனர். அதோடு வியாபாரிகள் இது போன்று கள்ள நோட்டு விவகாரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: "உங்கள் மகன் பிழைக்க மாட்டான்.." - மருத்துவர்கள் கூறியதை பொய்யாக்கிய இரண்டு தலை கொண்ட அரிய சிறுவன்..