Tamilnadu

“வெளியே சொன்னால் கொன்று விடுவேன்” - 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை : மகிளா நீதிமன்றம் அதிரடி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு (46). இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த பொழுது பாலியல் தாக்குதல் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் சிறுமியின் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டி அதை பயன்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

பின்னர் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரணை செய்த போது, சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் சிறுமியை பரிசோதனை செய்யும் பொழுது அவர் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அந்த சிறுமியின் கர்ப்பம் கலைந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து விராலிமலை காவல் துறையினர் குழந்தைவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி சத்யா குழந்தைவேலு மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஒரு ஆயுள் மற்றும் 6 சிறை தண்டனையும், 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி குழந்தைவேலு காவல்துறை பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

Also Read: “பாலியல் தொழில்.. VIP-களுக்கு போதை விருந்து” : பா.ஜ.க தலைவர் மகன் விடுதியில் நடந்த அவலம் - பகீர் தகவல்!