Tamilnadu

தோழியின் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகையை திருடிய பெண்.. போலிஸில் சிக்கியது எப்படி?

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். இவரது மகளுக்குக் கடந்த 18ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறவினர்கள் மற்றும் மணப்பெண்ணின் தோழிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் மாயமானதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இது குறித்து முகமது ஆரிப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உறவினர்கள் மற்றும் மணப்பெண்ணின் தோழிகளிடமும் போலிஸார் விசாரணை செய்தனர். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினிதா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

பிறகு அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் நகையை திருடி விற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணும், வினிதாவும் மன்னார் குடியில் ஒன்றாக கல்லூரி படிக்கும் போது தோழிகளாக இருந்துள்ளனர்.

பிறகு படிப்பு முடித்து விட்டு வினிதா சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து தோழியின் திருமண நிச்சயத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருடனே வினிதா தங்கியுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகு நகைகள் அனைத்தையும் கழட்டி வீட்டில் இருந்த பீரோவில் வைத்துள்ளார்.

இதைப்பார்த்த வினிதா நகைகளைத் திருடிக் கொண்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார். பிறகு பாதி நகையை விற்று புதிய நகை ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் ஊருக்கு வந்த அவர் மீதி நகையையும் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கணவன் அடித்ததால் விபரீத முடிவெடுத்த காதல் மனைவி.. உறவினர்கள் அதிர்ச்சி!