Tamilnadu

ரூ.20 ஆயிரம் கேட்டு செல்போன் ஊழியர்கள் கடத்தல்.. மாறு வேடத்தில் சென்று 6 பேரை கைது செய்த போலிஸ்!

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ் (25). இவரது கடையில் முகம்மது இப்ராஹிம் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் வேலை பார்க்கின்றனர்.

இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு கடையை மூடிவிட்டு சாவியை டில்லிகணேஷிடம் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்தோஷ்குமார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய இருவரையும் தாக்கி கடத்திச் சென்றனர்.

பின்னர், திருவள்ளூர் என்.ஜி.ஓ.காலனியில் உள்ள பூங்காவிற்கு சென்ற இந்த கும்பல் வைத்து செல்போன் கடை உரிமையாளர் டில்லி கணேஷை தொடர்பு கொண்டு உங்கள் கடை ஊழியர்களைக் கடத்தியதாகவும், ரூ. 20 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டுவரச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலிஸார் அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்று கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆகாஷ், அன்சார் ஷெரிப், உதயா, பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பிராங்க்ளின், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (19), மோகன் (26) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்து போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: தோழியின் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகையை திருடிய பெண்.. போலிஸில் சிக்கியது எப்படி?