Tamilnadu

“9 மணி நேர சோதனை.. SP.வேலுமணி நண்பர் வீட்டில் சிக்கிய லேப்டாப் & ஆவணங்கள்” : விசாரணையில் நடந்தது என்ன?

சென்னை மற்றும் கோவையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் இல்லங்களிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் இல்லங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் காலை 6 மணி முதலே லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, இடையூறு ஏற்படுத்திய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து சோதனை நடைபெற்ற நிலையில், 9 மணி நேரத்திற்கு பிறகு சோதனை நிறைவடைந்தது. சோதனையின் ஒரு பகுதியாக வடவள்ளி பகுதியில் உள்ள கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் காலை 6:00 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சுமார் 9 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சோதனை நிறைவு பெற்றது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சில ஆவணங்கள் லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர். இதனிடையே அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான சி.ஆர் கன்ஸ்ட்ரசன் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு - கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?