Tamilnadu

”இந்தியாவின் பிளவு சக்தி யார்?”.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தைக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

இந்த நடை பயணம் மூலமாக 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை மொத்தம் 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார் ராகுல் காந்தி. இவரின் இந்த நடை பயணத்தை பாரத் சோடோ யாத்திரை (இந்தியாவை விட்டு வெளியே செல்லுதல்) என தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "இந்தியாவைப் பிளவுபடுத்த பா.ஜ.க நினைக்கிறது. அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற உணர்வை வளர்ப்பதற்காக ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெறாத இயக்கம்தான் இந்து மகாசபை. இதன் வழிவந்த இவர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதில் ஆர்வம் காட்டியது இல்லை. இந்தியாவை பிளவு படுத்தவே நினைக்கின்றனர். இதிலிருந்தே தெரிகிறது யார் பிளவு சக்தி என்று" என தெரிவித்துள்ளார்.

Also Read: 150 நாட்கள்- 3500 கி.மீ தூரம்.. தேசியக் கொடியை கையில் கொடுத்து ராகுல் பயணத்தைத் தொடங்கி வைத்த முதல்வர்!