Tamilnadu

இந்து கோயிலுக்கு தடபுடலாக சீர் எடுத்து சென்ற இஸ்லாமியர்கள்.. மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான கிராமம்!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கருங்கல்லால் பட்டவ அய்யனார் கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்காகக் கடந்த 5 நாட்களாக யாகசாலை பூசைகள் நடைபெற்று வந்தது. மேலும் கும்பாபிஷேகத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றிலிருந்து சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பொதுமக்கள் கோயிலுக்குச் சீர் கொண்டு செல்லும் நிகழ்வு நடந்தது.

இந்நிலையில், பட்டவ அய்யனார் கோயிலுக்கு கீரமங்கலம் மேற்கு பேட்டை பள்ளிவாசலிலிருந்து தேங்காய், காய், கனி, பூ, வெற்றிலை பாக்கு, பணம் என 21 சீர்வசரியையுடன் இஸ்லாமியர்கள் ஊர்வலமாகச் சீர் கொண்டு சென்றனர். அப்போது கோயில் வளாகத்தில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் காசிம்புதுக்கோட்டை இஸ்லாமியர்களும் சீர் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு எப்போதும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியர்களுக்கு இடையே மதத்தைக் கொண்டு வெறுப்பு அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த மண்ணில் அதற்குச் சாத்தியம் இல்லை என்பதை இந்த சம்பவம் சொல்லாமல் சொல்லியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: சூரரைப் போற்று நாயகியின் அடுத்த அவதாரம் சுந்தரி கார்டன்ஸ்.. படம் எப்படி?