Tamilnadu

எச்சரிக்கையை மீறி சென்ற கார்.. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள்.. போராடி மீட்ட ஊர்மக்கள் !

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திழும் கடந்த ஒருவாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு கனமழை பெய்யத் தொடங்கியது.

இந்த நிலையில் வேடசந்தூரில் இருந்து ஈசநத்தம் வழியாக கரூர் செல்லும் சாலையில் கூம்பூருக்கும் அழகாபுரிக்கும் இடையே உள்ள தரைப்பாலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது காரில் தனது நண்பர்கள் 5 பேரோடு இந்த சாலை வழியாக கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் இந்த தரைப்பாலத்தில் குறைந்த அளவு வெள்ளம் செல்வதாக கருதிய அவர்கள் காரில் தரைப்பாலத்தை கடக்க முயற்சித்தனர். கார் பாலத்தின் நடுப்பகுதி வரை சென்ற நிலையில், அங்கு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு அடித்துச்செல்லப்பட்டது.

கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து மீட்புப்படைக்கு தகவல் அளித்தனர். அதோடு நிற்காமல், காரையும்,அதன் உள்ளே இருந்தவர்களையும் மீட்கும் பணியில் உடனடியாக இறங்கினர்.

அங்கிருந்த ஒரு ட்ராக்டரில் கயிறு கட்டி காரை இழுந்த பொதுமக்கள் சுமார் 1 மணி நேரம் போராடி காரையும் அதில் இருந்தவர்களையும் மீட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய காரை மீட்டவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் பாராட்டினர்.

இது குறித்து பேசிய அந்த ஊர் பொதுமக்கள், சமீப காலமாக அந்த பகுதியில் இதுபோன்ற வெள்ளம் ஏற்படவில்லை என்றும், அப்படியே வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றால் அதில் வாகனம் ஏதும் செல்லமுடியாது என இந்த பகுதி மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும், இந்த வாகனத்தில் வந்தவர்கள் வெளியூர்காரர்கள் என்பதால் இது தெரியாமல் வந்து சிக்கொண்டனர், எனினும் அவர்களை பத்திரமாக மீட்டோம் என்றும் கூறினர்.

Also Read: 3 நாட்களுக்கு பின் தாயுடன் இணைந்த குட்டி யானை... வனத்துறையின் உதவியோடு முடிவுக்கு வந்த பாச போராட்டம் !