Tamilnadu

செல்போன் சார்ஜர் வெடித்து கூலி தொழிலாளி பரிதாப பலி.. ஓலை வீட்டில் தூங்கியவருக்கு நேர்ந்த சோகம் !

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூழைமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34). BA பட்டதாரியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது இவர்களுக்கு யஸ்வந்த், திவின் என்று இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது மனைவி மற்றும் மகன் தூங்கிக்கொண்டிருந்ததால், அர்ஜுன் மற்றொரு தென்னை ஓலை வீட்டில் இவர் தூங்க சென்றிருந்தார். அந்த சமயத்தில் தனது மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார்.

அப்போது திடீரெனெ செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஓலை வீடு முழுவதுமாக தீப்பற்றிக்கொண்டது. ஏதோ சத்தம் கேட்டதும் திடீரென எழுந்து பார்த்த அர்ஜுன், வீடு தீப்பற்றிக்கொண்டதால் பதற்றமடைந்தார். மேலும் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கமபக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வருவதற்குள் அர்ஜுன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், கருகி கிடந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இது காரா.. இல்ல கதவா.. Confusion.." - வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ !