Tamilnadu

சிறுமி கருமுட்டை விவகாரம் : தாய் உட்பட அனைவர் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து அவரது கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட காவல் துறையினருக்கு சில நாட்களுக்கு முன்பு புகார் சென்றது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் உட்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுத்து விற்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினர், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் தலைவர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட 4 மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

மேலும் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேர் இந்த வழக்கு சம்மந்தமாக கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Also Read: “கருமுட்டை விற்பனை விவகாரம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும்” : ஐகோர்ட்டில் நடந்த அதிரடி வாதங்கள்!