Tamilnadu

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு.. சம்பவத்தில் தொடர்புடைய பாஜக மகளிர் அணியினர் கைது!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ம் தேதி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் இந்த வீர மரணத்திற்குப் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அரசு தரப்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்த பா.ஜ.கவினர் சிலர் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது காரில் வெளியே செல்லும்போது,பா.ஜ.கவினர் திடீரென அவரது காரை வழிமறித்தனர். மேலும் அவர்கள் அமைச்சர் கார் மீது காலணியை வீசி அராஜகமாக நடந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்த போலிஸார் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர். பிறகு அமைச்சர் அங்கிருந்து காரில் சென்றார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை பாஜக தலைவர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேசிய கொடி இருந்த அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய பா.ஜ.க மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வாணை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: குஜராத் கலவரம் - கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு- குற்றவாளிகளை விடுவித்து பாஜக அரசு உத்தரவு !