Tamilnadu

சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்குச் சொந்தமான துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் 2012, 2013, 2014 இல் தொடர்ந்து 37% மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அடித் தட்டு மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தான் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஒன்றிய அரசின் அழுத்தமே மின் கட்டண உயர்வுக்குக் காரணம். மின் கட்டணம் உயர்ந்ததாகக் கூறும் பா.ஜ.க-வினர் கர்நாடகா மற்றும் குஜராத்தை கண்டித்துத்தான் போராட்டம் நடத்த வேண்டும். சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக நாளை போராட்டம் நடத்துமா?.

தற்போது அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் விரைவில் மாதந்தோறும் கணக்கீடு செய்யும் பணி தொடங்கும்.

அதேபோல், மின்கட்டணம் உயர்ந்ததாகப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள அ.தி.மு.க சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துமா?. கேஸ் மானியத்திற்கும் மின்சார மானியத்திற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரே ஆண்டில் 70 % மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக 30% மீதம் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: செயற்கை கை கால்களை பொருத்திய கோவை அரசு மருத்துவமனை.. முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சாதனை !