Tamilnadu

நிலத்தை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல்.. OPS தம்பி ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!

தேனி மாவட்டம், வடுகபட்டி ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி சந்தான லட்சுமி. இந்த தம்பதிக்குக் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தில் 83 சென்ட் நிலம் உள்ளது.

இந்நிலையில் தங்களின் மகளின் திருமணத்திற்காக இந்த நிலத்தை விற்க முனியாண்டி முன்வந்துள்ளார். இது அறிந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா ரூ.40 லட்சத்திற்கு தானே வாங்கிக் கொள்வதாக முனியாண்டியிடம் கூறியுள்ளார்.

மேலும், அந்த நிலத்தை கிருஷ்ணன் என்பவரின் பெயரில் எழுதித் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் முனியாண்டி, ராஜா கூறியபடியே கிருஷ்ணனுக்கு நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால், அதன்பிறகு கூறிய படி பணத்தைக் கொடுக்காமல் ஓ.ராஜா இழுத்தடித்து வந்துள்ளார். பணம் குறித்துப் பல முறை கேட்டும் ஒப்புக்கொண்ட படி பணத்தை தராமல் நாட்களைக் கடத்தி வந்துள்ளார். மேலும் பணம் குறித்துக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து முனியாண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார்இது குறித்து விசாரணை நடித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அக்காவுடன் ஏற்பட்ட சேலை தகராறு : இரயில் முன் பாய்ந்த தங்கை.. புடவைக்காக பறிபோன உயிர் !- பின்னணி என்ன ?