Tamilnadu

செயற்கை கை கால்களை பொருத்திய கோவை அரசு மருத்துவமனை.. முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சாதனை !

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். 22 வயது இளைஞரான இவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் மின் விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் தனது இரு கைகள், கால்களை இழந்தார். இதையடுத்து தனக்கு செயற்கை கை கால்கள் பொருந்துமாறு கோவை மாவட்ட ஆட்சியரான சமீரானிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இதனையடுத்து ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செயற்கை அவையங்கள் உற்பத்தி மையத்தில் இந்த இளைஞருக்கு ஏற்றாற்போல், செயற்கையான கைகள் மற்றும் கால்களை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனையின் முடநீக்கியல், விபத்து சிகிச்சை பிரிவு இயக்குநர் செ.வெற்றிவேல் செழியன் தலைமையில், செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலச்சந்தர், ஆனந்த்பாபு, கோகுல்ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.

பின்னர், முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுபாஷூக்கு எடை குறைந்த இரு செயற்கை கைகள், கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டதோடு, அவருக்கு செயற்கை கைகள், கால்களை இயக்குவதற்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை நேற்று (ஜூலை 21) நேரில் சந்தித்த சுபாஷ், தனது செயற்கை கை கால்களை காண்பித்து நன்றி தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நிர்மலா கூறுகையில், "சுபாஷுக்கு தேவையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உளவியல் ஆலோசனை ஆகியவை முடநீக்கியல் மருத்துவ நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களால் வழங்கப்பட்டன. இரண்டு கைகள், கால்களை இழந்த ஒருவருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை அங்கங்களை தனியாரிடம் தருவிப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும். காப்பீட்டு திட்டத்தின்கீழ் அவை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. இதனால் சுபாஷ் தானாகவே தன் வேலைகளை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்”என்றார்.

தமிழ்நாட்டில் முதல்வா் மருத்துவ காப்பீட்டு காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் இரண்டு கைகள், கால்களை இழந்தவருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "கிட்ட வராதீர்கள், என் பையில் வெடிகுண்டு இருக்கிறது" -விமானத்தில் அனைவரையும் அதிரவைத்த பயணி!