Tamilnadu

"வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு! மாநிலங்களின் ஒன்றுபட்ட குரல் தேவை" - சு.வெங்கடேசன் எம்.பி!

தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பாக சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உதய் திட்டத்தில் அ.தி.மு.க அரசு கையெழுத்திட்டதால் மின்வாரியத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. ஓராண்டில் மின்வாரியத்தை மேம்படுத்தி ரூ.2200 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் மின்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது.

இந்த கடும் நெருக்கடியில் இருக்கும்போது ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில்தான் பொதுமக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது." எனக் கூறினார். இதன் மூலம் மின்கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசின் அழுத்தமே காரணம் என பொதுமக்களுக்கு நன்கு புரிந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "1... 2... 28 முறை அரசு மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசின் மானியங்கள் கிடைக்காது என கண்டிப்போடு 28 முறை கடிதங்கள் வந்தன - அமைச்சர் செந்தில் பாலாஜி

வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு!

மாநிலங்களின் ஒன்றுபட்ட குரல் தேவை." எனக் கூறியுள்ளார். இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றுபட்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை முறியடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார். அவரின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரம்.. இணையத்தில் வைரலாக புகைப்படம் .. உருவான விதத்தை விளக்கிய மாணவர்கள்!