Tamilnadu

மின்கட்டண உயர்வு ஏன்? எப்படி? ஒன்றிய அரசின் அழுத்தமே காரணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு மொத்தம் 28 முறை தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் நிதி வழங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பாக சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியது வருமாறு:-

உதய் திட்டத்தில் அ.தி.மு.க அரசு கையெழுத்திட்டதால் மின்வாரியத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. ஓராண்டில் மின்வாரியத்தை மேம்படுத்தி ரூ.2200 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் மின்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது.

இந்த கடும் நெருக்கடியில் இருக்கும்போது ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில்தான் பொதுமக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கடும் நெருக்கடி காரணமாக 8 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read: "அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே வன்முறை நடந்துள்ளது".. ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!