Tamilnadu

சமூகவலைதளத்தில் புகார்.. அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள்: 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

சென்னை அடுத்த சேலையூரில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரிசியும் வேகாமல் இருந்துள்ளது.

இதையடுத்து அந்த நபர் இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று அந்த உணவகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது உணவிற்கு கெட்டுபோன் இறைச்சிகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த 10 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சமைக்கும் இடம் சுகாதாரமற்ற முறையிலிருந்தது. நூடுல்ஸ், ரைஸ் எல்லாம் பழைய நிலையிலிருந்துள்ளது, 4 பாக்ஸ் கலர் பவுடர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கெட்டுப்போன இறைச்சியுடன் சேர்த்து அனைத்தையும் குப்பையில் கொட்டி அதிகாரிகள் அழித்தனர்.

இதையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். பிரபல உணவகத்தில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பள்ளி குழந்தைகளால் முடியும் போது உங்களால் முடியாதா?.. நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு யு.யு.லலித் கேள்வி!