Tamilnadu
சிறுமியின் கருமுட்டை 8 முறை விற்பனை; தனியார் மருத்துவமனையை இழுத்து மூட நடவடிக்கை.. அமைச்சர் மா.சு அதிரடி!
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து அவரது கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட காவல் துறையினருக்கு சில நாட்களுக்கு முன்பு புகார் சென்றது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் உட்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுத்து விற்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினர், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் தலைவர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "சிறுமியின் உண்மையான பெயர், வயது உள்ளிட்ட அடையாளங்களை மறைத்து கருமுட்டையை விற்று வந்ததாக அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மருத்துவமனைகளில் அளித்த ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலியானவை என தெரிந்தும் மருத்துவமனை அதற்கு துணை போயுள்ளது. மேலும் இந்த விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை.
எனவே கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளின் ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட 4 தனியார் மருத்துவமனைகளிலும் 15 நாட்களில் உள் நோயாளிகள் வெளியேற்றம் செய்து, நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!