Tamilnadu

“3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆட்சியர்” - திருவள்ளூரில் நெகிழ்ச்சி சம்பவம் !

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியை அடுத்து பஞ்செட்டி என்ற கிராமம் உள்ளது. ஊராட்சி பகுதியான இங்கு, இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அந்த மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேறும் இடம் ஆகியவற்றை கேட்டறிந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்குள்ள நூலக கட்டிடம், வயல்வெளி போன்றவற்றையும் பார்வையிட்டார். அப்படியே அருகிலிருக்கும் அழிஞ்சி வாக்கம் ஊராட்சியிலுள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு உணவுகள், முட்டைகள் சரியாக வழங்கப்படுகிறதா ?, பாடங்கள் ஒழுங்காக கற்பிக்க படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அப்பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறைக்கு சென்று, அங்குள்ள மாணவ - மாணவிகளிடம் தமிழ் பெயர்கள் குறித்தும், கணக்கு குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு சில மாணவர்கள் பதிலளிக்காமல் நின்றதால் அவர்களுக்கு பாடமும் எடுத்தார்.

இதையடுத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் நன்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்படி அறிவுரை வழங்கினார். ஒரு கலெக்டர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்க பாத்தியா..” : Map பார்த்து கார் ஓட்டிய நபர் - வயலுக்குள் சிக்கிய கார்!