Tamilnadu

“பா.ஜ.க ஆட்சி செய்தால், அதானிக்கோ அம்பானிக்கோ விற்பார்கள்..” - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த தி.மு.க MP !

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பதவியேற்றபோது கையெழுத்திட்ட உத்தரவுகளில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டமும் அடங்கும்.

மேலும் தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிய நிலையில், கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு பயனூரும் வகையில் 2,213 பேருந்துகள் விரைவில் இயக்கவுள்ளது.

இவை ஏன், அண்மையில் கூட அரசு பேருந்துகளில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்க கூடிய எந்த செயலையும் செய்யக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தி.மு.க அரசு செய்யும் அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு பா.ஜ.க குறைகூறி கொண்டே இருக்கிறது. மேலும் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டையும் தொடர்ந்து முன் வைத்து வருகிறது.

அதன்படி, அன்மையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசைப் பற்றி குற்றசாட்டை முன் வைத்துள்ளார். அதாவது தமிழ்நாடு அரசு, 25 % பேருந்து போக்குவரத்தை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக ஒரு பொய்யான குற்றசாட்டை வைத்துள்ளார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தி.மு.க எம்.பி., எம்.எம்.அப்துல்லா, "தமிழ்நாட்டை பா.ஜ.க ஆட்சி செய்தால், ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு விற்றது போல், அரசு போக்குவரத்து கழகத்தை அதானிக்கோ அம்பானிக்கோ விற்பார்கள். ஆனால் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடப்பதால், போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு விற்க வாய்ப்பில்லை. எனவே அண்ணன் அண்ணாமலை பயப்படத் தேவையில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Also Read: கிளீனர் வேலை டூ CEO.. ஆஸ்திரேலியாவின் இளம் தொழிலதிபராக உயர்ந்த இந்தியர் - யார் இந்த ஆமீர் குதுப்?