Tamilnadu

“தெரியாமல் கை பட்டுவிட்டது”: நடுவானில் பறந்தபோது சில்மிஷம் செய்த நபர் - இளம்பெண் எடுத்த துணிச்சல் முடிவு!

சவுதி அரேபியாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர் பயணித்தாா். அவருடைய இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் 45 வயது ஆண் பயணி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அந்த ஆண் பயணி சவுதி அரேபியாவில் டாக்டராக பணியாற்றுகிறார். அதோடு அவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இந்த டாக்டர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண் விமானத்திலேயே கூச்சல் போட்டு, விமான பணிப்பெண்கள் இடமும் புகார் தெரிவித்தார். அவர்கள் விமானியிடம் தகவல் தெரிவித்தனர். அதோடு அந்த ஆண் பயணியை, விமான பணிப்பெண்கள் கடுமையாக எச்சரிக்கவும் செய்தனர்.

இந்த நிலையில் விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அந்தப் பெண் பயணி, விமான ஊழியர்களின் உதவியுடன், அந்த டாக்டரை சென்னை விமான நிலைய போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகாா் செய்தாா். போலிஸார் விசாரணை நடத்தினா்.

அப்போது விசாரணையில் நான் வேண்டுமென்றே சில்மிஷம் பண்ணவில்லை. தூக்கத்தில் தெரியாமல் என் கை பட்டு விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார். இதையடுத்து அந்த பெண் பயணி, டாக்டரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, போலிஸில் அளித்த புகாரை திரும்பப் பெற்றாா். இதையடுத்து 2 பேரும் சமரசமாக போலிஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனா்.

Also Read: கால்வாயில் குளித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்: நண்பர்கள் கண் எதிரே நடந்த அதிர்ச்சி சம்பவம்!