Tamilnadu

காதலித்து, உறவு கொண்டுவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : காதலனை ‘கம்பி’ எண்ண வைத்து பாடம் புகட்டிய காதலி !

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி (34), சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரோடு ஒன்றாக படித்து தற்போது வழக்கறிஞராக உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அப்பெண்ணிடம் நெருங்கிப் பழகி பலமுறை ஒன்றாக தனிமையில் இருந்துள்ளார். திடீரென முரளி சரிவர பேசாமல், விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட பெண் என கூறி இழிவுப்படுத்தி திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.

இந்நிலையில், திடீரென நாளை வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த தகவலை அறிந்த பெண், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலிஸார் வழக்கறிஞர் முரளியை கைது செய்தனர். அவர் மீது 417, 420, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 15ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

காதலித்து உறவு கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி கம்பியை நீட்டி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வழக்கறிஞரை கம்பி எண்ண வைத்துள்ளார் காதலியின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.