Tamilnadu

இனி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால்... மாணவர்களுக்கு சென்னை போலிஸ் கமிஷ்னர் கடும் எச்சரிக்கை!

பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அத்துமீறி மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், மாணவர்கள் இடையே நடைபெறும் மோதல் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், நேற்று சென்னையில் மூன்று இடங்களில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களை அடிக்கும் அதிகாரம் காவலர்களுக்கு இல்லை. ஆனால், காவலர்களும் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள். காவலர்களுக்கு ஒழுக்கம் கற்று கொடுக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்களுடன் கனிவாக நடக்கவும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது என கூறினார்.

மேலும் காவல்துறையினர் உயர்கல்வித்துறை உடன் பேசி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒரு வார கால ஆலோசனை வழங்கி, பேருந்தில் நடைபெறும் மோதல்கள் உள்ளிட்ட அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். கொலையாளிகள் இருவரின் 3 மாதகால அலைபேசி உரையாடல்களை ஆராய்ந்தோம். அதில், 2 கொலையாளிகளை தவிர இந்த வழகில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்திருக்கிறது என விளக்கமளித்துள்ளார்.

Also Read: 500 ஆண்டு தொன்மையான பச்சைக்கல் லிங்கம்; ரூ.25 கோடிக்கு விற்க முயன்ற இருவர்: நம்பவைத்து சிக்கவைத்த போலிஸ்!