Tamilnadu

விஷ நெடியுடன் மதுபாட்டில் விற்பனை.. திருவள்ளூர் அதிமுக நிர்வாகியை வலைவீசி தேடும் போலிஸார்!

சட்டவிரோதமாக விஷ நெடியுடன் கூடிய மதுபாட்டில்களை விற்ற திருவள்ளூர் அதிமுக நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினரான கந்தசாமியை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் அதிமுக நகர செயலாளர் கந்தசாமிக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோதமாக விஷத்தன்மையுள்ள மதுபாட்டில் விற்கப்படுவதாக மணவாள நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலிஸார் சோதனை மேற்கொண்டர். அப்போது அங்கு விஷத்தன்மையுள்ள மது பாட்டில்களை வைத்து விற்று வந்திருந்த காளிதாஸ் (33), சேவியர் (48) ஆகிய இருவரை மணவாளநகர் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள 144 மது பாட்டில்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

விஷத்தன்மையுள்ள மது பாட்டில்களை சட்ட விரோதமாக தனது கட்டடத்தில் வைத்து விற்க அனுமதி கொடுத்த அதிமுக நகர செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான கந்தசாமி உட்பட 2 பேரை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கந்தசாமி மீது கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட்டு வந்திருந்தபோது மோசடி வழக்கில் அவர் மீது வணிகவரி குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அண்மையில் முன்ஜாமீன் பெற்ற அவர் மீது மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்க இடமளித்தது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: சமையல் கேஸ் மானியத்தில் ரூ.19.88 லட்சத்தை சுருட்டிய திருவள்ளூர் அதிமுக நிர்வாகி; மூவருக்கு வலைவீச்சு!