Tamilnadu

பள்ளி மாணவனின் முகத்தை சிதைத்த மர்ம கும்பல்.. வீட்டுக்கு வெளியே உறங்கியபோது நேர்ந்த அவலம்: நடந்தது என்ன?

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவியரசன். இவருடைய மகன் பார்த்திபன் (17) புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு காற்றுக்காக வீட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பார்த்திபன் தலை முகம் என ஐந்து இடங்களில் கத்தியால் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வானமாமலை சம்பவ இடத்திற்கு வந்து வெட்டுப்பட்ட விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், எதற்காக பார்த்திபனை வெட்டினார்கள்? யார் வெட்டியது என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன் விரோத காரணமாக இந்த சம்பவம் நடைபெற்ற சிறுவன் வீட்டிற்கு பயந்து கூற மறுக்கிறானா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: ஆசையாய் வாங்கிய ஸ்கூட்டர் இரண்டாக உடைந்த சோகம் : தீ விபத்தை தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் எலக்ட்ரிக் பைக்!