Tamilnadu

சொந்த காருக்கு தானே தீ வைத்துவிட்டு நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகி : ‘காப்பு’ மாட்டி சிறையில் தள்ளிய போலிஸ் !

சென்னை அடுத்த மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் பா.ஜ.க திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு நேற்று முன்திம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பிறகு, இவர்கள் யார் என போலிஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்கள் வீட்டின் அருகே இருந்த மாற்றொரு சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்தபோது, சதிஷ்குமார் தனது கார் மீது பெட்ரோல் ஊற்றுவதும், அதை கண்ட அவரது மகள் ஓடி வந்து தடுப்பதும் போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து சதிஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், சதிஷ்குமாரின் மனைவி நகை வாங்கி தரும்படி கேட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தங்களிடம் இருக்கும் 2 காரில் ஒன்றை விற்றாவது நகை வாங்கி தரும்படியும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த, சதிஷ்குமார் தனது காருக்கு தானே தீவைத்து கொளுத்தி விட்டு மர்ம நபர் கொளுத்தியதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சதிஷ்குமாரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பா.ஜ.க ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்செயல் 61% அதிகரிப்பு” : எச்சரிக்கும் கபில் சிபில் !