Tamilnadu

கொரோனா நோயாளிகளே இல்லாத சென்னை அரசு மருத்துவமனைகள்.. மு.க.ஸ்டாலினின் மக்களுக்கான ஆட்சிக்கு இதுவே சான்று!

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

”நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டம் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது, மருத்துவமனை தூய்மை பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், நோயாளிகளுடன் கலந்தாலோசித்தார். மேலும், மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி,

அரசு மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ”நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தை துவக்க உத்தரவிட்டார். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் தூய்மை பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில், மருத்துவமனை வளாகம், சிகிச்சை பெரும் வார்டுகள், கழிப்பறைகள் போன்றவற்றை தூய்மையாக வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்ததாகவும், இதற்கு பொதுமக்களும் தொடர்ந்து விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இதற்காக வாரம் ஒருநாள் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் பிரத்யேகமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை, 1.4 லட்சம் புறநோயாளிகளுக்கும், 54 ஆயிரம் உள்நோயாளிகளுக்கும் இந்த பிரத்யேக மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் கடந்த ஒரு வாரமாக ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலையை எட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் மீண்டும் கொரோனாவின் மற்றொரு அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளவும் மருத்துவமனையில் தேவையான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்தார்.

Also Read: “இதுதான் தமிழ்நாடு”: இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க உணவு வழங்கும் இந்துக்கள்.. 40 ஆண்டுகளாக தொடரும் வழக்கம்!