Tamilnadu

பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு.. சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய பயணி- பெரும் விபத்து தவிர்ப்பு!

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், பயணி ஒருவர் சாதுர்யமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்துள்ளார்.

ஈரோட்டில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்தை ஓட்டுநர் பழனிச்சாமி ஓட்டிச்சென்றுள்ளார். திண்டல் அருகே சென்றபோது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஓட்டுநர் பழனிச்சாமி, பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்றார். ஆனாலும் அவரால் முடியாத நிலையில், அருகில் இருந்த பயணி ஒருவர் சமயோசிதமாகச் செயல்பட்டு சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி பேருந்தை நிறுத்தினார்.

இதனால் அலறிய பயணிகள், உடனடியாக ஓட்டுநர் பழனிச்சாமியை டிரைவர் சீட்டில் இருந்து இறக்கினர். அந்த வழியாகச் சென்ற வாகனங்களை மடக்கிய பயணிகள், கார் ஒன்றில் பழனிச்சாமியை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், பயணிகளை வேறொரு அரசுப் பேருந்தில் திருப்பூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

பயணத்தின்போது ஓட்டுநருக்கு, நெஞ்சு வலி, மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு, பேருந்து விபத்துக்குள்ளாகி பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்த ஓட்டுநருக்கு அப்படி நெஞ்சு வலி ஏற்பட்டபோதும், பயணி ஒருவர் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியது பாராட்டைப் பெற்றுள்ளது.

Also Read: கூடுதல் ஊதியத்துக்காக விமானத்தை பழுதாக்கிய மெக்கானிக் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 150 பயணிகள்!