Tamilnadu

கோவையில் பாஜகவினரிடையே மோதல்.. உட்கட்சி பூசலில் நடந்த கொலைவெறி தாக்குதலில் ஒருவர் படுகாயம்: பின்னணி என்ன?

கோவை இராமநாதபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியில், நெசவாளர் அணி செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியில் ஜிபி ஸ்டுடியோ நடத்தி வருகின்றார்.

இதற்கிடையே, பா.ஜ.கவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் போட்டியிடக்கூடாது என பா.ஜ.கவை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் கூறி வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், கடந்த 30 ந்தேதி மாலையில் ஜெயக்குமாரின் ஸ்டுடியோவிற்கு வந்த கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து ஜெயக்குமாரை மிரட்டியதுடன், அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த இவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சுயநினைவு இழந்ததாகவும், தற்போது தான் சுயநினைவு வந்ததாகவும், உட்கட்சி பிரச்சினையில் தன்னை தாக்கிய பா.ஜ.கவினர் மற்றும் உடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரை தாக்கும் சிசிடிவி காட்சிகளுடன் இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக், முத்துகுட்டி உள்ளிட்ட 4 பேர் மீது ராமநாதபுரம் போலிஸார் 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். பா.ஜ.க உட்கட்சி பூசலில் ஒருவரை ஒருவர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘துன்புறுத்தாதீர்கள்’.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் மருத்துவர் தற்கொலை - சிக்கிய பாஜக நிர்வாகி !