Tamilnadu

அ.தி.மு.க ஆட்சியில் ‘போலி ரசீது’ கொடுத்து ஏமாற்றப்பட்ட விவசாயி.. 6 ஆண்டுகளுக்குப் பின் அறிந்து அதிர்ச்சி!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இலவச மின் இணைப்புக்கு முன் பணம் செலுத்திய ரசீது போலி என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால், விவசாயி அதிர்ச்சியடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், வேங்கராயன் குடிக்காட்டைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (30). விவசாயியான இவரது விவசாய கிணற்றில் உள்ள பம்பு செட்டுக்கு, இலவச மின் இணைப்பு கேட்டு, தஞ்சாவூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி விண்ணப்பித்து, முன்பதிவு கட்டணம் 500 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், மின் இணைப்பு தொடர்பாக அலுவலர்கள் எதுவும் சொல்லாத நிலையில், தனக்குப் பின் விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு கிடைத்துவிட்டதால் கடந்த மார்ச் 3ஆம் தேதி, மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது, ரசீதை வாங்கிப் பார்த்த அதிகாரிகள், இலவச மின் இணைப்பு திட்டத்துக்கு பணம் செலுத்தியதாக அவர் காட்டிய ரசீது போலியானது எனத் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி பாண்டியராஜ், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்தார்.

மேலும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இலவச மின் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பாண்டியராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: போலி கையெழுத்திட்டு நிலம் அபகரிப்பு - அதிகாரிக்கு கொலை மிரட்டல் : அதிமுக நிர்வாகி கைது - அடுத்து யார்?